Saturday, August 25, 2012

வெண்ணிலா-Venila

வெண்ணிலா 

(வெண்ணிலா என்பது இங்குச் சந்திரனுடைய 
பிரகாசத்தையன்று, சந்திரனையே குறிப்பது.) 

எல்லை யில்லாததோர் வானக் கடலிடை
வெண்ணிலாவே - விழிக்
கின்ப மளிப்பதோர் தீவென் றிலகுவை
வெண்ணிலாவே.
சொல்லையும் கள்ளையு நெஞ்சையுஞ் சேர்த்திங்கு
வெண்ணிலாவே - நின்றன்
சோதிமயக்கும் வகையது தானென்சொல்
வெண்ணிலாவே.
நல்ல வொளியின் வகைபல கண்டிலன்
வெண்ணிலாவே
நனவை மறந்திடச் செய்வது கண்டிலன்
வெண்ணிலாவே.
கொல்லு மமிழ்தை நிகர்த்திடுங் கள்ளொன்று
வெண்ணிலாவே - வந்து
கூடியிருக்குது நின்னொளி யோடிங்கு
வெண்ணிலாவே.

மாதர் முகத்தை நினக்கிணை கூறுவர்
வெண்ணிலாவே - அஃது
வயதிற் கவலையி னோவிற் கெடுவது
வெண்ணிலாவே.
காத லொருத்தி யிளைய பிராயத்தள்
வெண்ணிலாவே - அந்தக்
காமன் றன்வில்லை யிணைத்த புருவத்தள்
வெண்ணிலாவே.
மீதெழு மன்பின் விளைபுன் னகையினள்
வெண்ணிலாவே - முத்தம்
வேண்டிமுன் காட்டு முகத்தி னெழிலிங்கு
வெண்ணிலாவே.
சாத லழித லிலாது நிரந்தரம்
வெண்ணிலாவே - நின்
தண்முகந் தன்னில் விளங்குவ தென்னைகொல்
வெண்ணிலாவே.

நின்னொளி யாகிய பாற்கடல் மீதிங்கு
வெண்ணிலாவே - நன்கு
நீயு மமுது மெழுந்திடல் கண்டனன்
வெண்ணிலாவே.
மன்னு பொருள்க ளனைத்திலு நிற்பவன்
வெண்ணிலாவே - அந்த
மாயனப் பாற்கடல் மீதுறல் கண்டனன்
வெண்ணிலாவே.
துன்னிய நீல நிறத்தள் பராசக்தி
வெண்ணிலாவே - இங்குத்
தோன்று முலகவ ளேயென்று கூறுவர்
வெண்ணிலாவே.
பின்னிய மேகச் சடைமிசைக் கங்கையும்
வெண்ணிலாவே - நல்ல
பெட்புற நீயும் விளங்குதல் கண்டனன்
வெண்ணிலாவே.

காதலர் நெஞ்சை வெதுப்புவை நீயென்பர்
வெண்ணிலாவே - நினைக்
காதல்செய் வார்நெஞ்சிற் கின்னமு தாகுவை
வெண்ணிலாவே.
சீத மணிநெடு வானக் குளத்திடை
வெண்ணிலாவே - நீ
தேசு மிகுந்தவெண் டாமரை போன்றனை
வெண்ணிலாவே.
மோத வருங்கரு மேகத் திரளினை
வெண்ணிலாவே - நீ
முத்தி னொளிதந் தழகுறச் செய்குவை
வெண்ணிலாவே.
தீது புரிந்திட வந்திடும் தீயர்க்கும்
வெண்ணிலாவே - நலஞ்
செய்தொளி நல்குவர் மேலவ ராமன்றோ?
வெண்ணிலாவே.

மெல்லிய மேகத் திரைக்குள் மறைந்திடும்
வெண்ணிலாவே - உன்றன்
மேனி யழகு மிகைப்படக் காணுது
வெண்ணிலாவே.
நல்லிய லார்யவ னத்தியர் மேனியை
வெண்ணிலாவே - மூடு
நற்றிரை மேனி நயமிகக் காட்டிடும்,
வெண்ணிலாவே.
சொல்லிய வார்த்தையில் நாணுற் றனைபோலும்
வெண்ணிலாவே - நின்
சோதி வதன முழுது மறைத்தனை
வெண்ணிலாவே.
புல்லியன் செய்த பிழைபொறுத் தேயருள்
வெண்ணிலாவே - இருள்
போகிடச் செய்து நினதெழில் காட்டுதி,
வெண்ணிலாவே. 

No comments:

Post a Comment