Wednesday, August 15, 2012

கண்ணம்மா-என் காதலி(நாணிக் கண் புதைத்தல்)-Kannamma en kadali(Naani kan pudaithal)

கண்ணம்மா-என் காதலி
(நாணிக் கண் புதைத்தல்)
நாதநாமக்கிரியை-ஆதிதாளம்
சிருங்கார ரசம்


மன்னர் குலத்தினிடைப் பிறந்தவளை-இவன்
மருவ நிகழ்ந்ததென்று நாண முற்றதோ?
சின்னஞ் சிறுகுழந்தை யென்ற கருத்தோ?-இங்கு
செய்யத் தகாதசெய்கை செய்தவ ருண்டோ?
வன்ன முகத்திரையைக் களைந்தி டென்றேன்-நின்றன்
மதங்கண்டு துகிலினை வலிதுரிந்தேன்.
என்ன கருத்திலடி கண்புதைக்கிறாய்?-எநனக்
கெண்ணப் படுவதில்லை யேடி கண்ணம்மா! 1

கன்னி வயதிலுனைக் கண்ட தில்லையோ?-கன்னங்
கன்றிச் சிவக்க முத்த மிட்ட தில்லையோ!
அன்னிய மாகநம்மள் எண்ணுவ தில்லை-இரண்
டாவுயுமொன் றாகுமெனக் கொண்ட தில்லையோ?
பன்னிப் பலவுரைகள் சொல்லுவ தென்னே? துகில்
பறித்தவன் கைபறிக்கப் பயங்கொள்வனோ
என்னைப் புறமெனவுங் கருதுவதோ-கண்கள்
இரண்டினில் ஒன்றையொன்று கண்டு வெள்குமோ? 2

நாட்டினிற் பெண்களுக்கு நாயகர் சொல்லும்-சுவை
நைந்த பழங்கதைகள் நானுரைப்பதோ?
பாட்டுஞ் சுதியு மொன்று கலந்திடுங்கால்-தம்முள்
பன்னி உபசரணை பேசுவ துண்டோ?
நீட்டுங் கதிர்களொடு நிலவு வந்தே-விண்ணை
நின்று புகழ்ந்துவிட்டுப் பின்மருவுமோ?
மூட்டும் விறகினையச் சோதி கவ்வுங்கால்-அவை
முன்னுப சாரவகை மொழிந்திடுமோ? 3

சாத்திரக் காரரிடம் கேட்டு வந்திட்டேன்;-அவர்
சாத்திரஞ் சொல்லியதை நினக்குரைப்பேன்;
நேற்று முன்னாளில் வந்த உறவன் றடீ!-மிக
நெடும்பண்டைக் காலமுதல் சேர்ந்து வந்ததாம்.
போற்றுமி ராமனென முன்புதித்தனை,-அங்கு
பொன்மிதிலைக் கரசன் பூமடந்தை நான்;
ஊற்றமு தென்னவொரு வேய்ங்குழல் கொண்டோன்-கண்ணன்
உருவம் நினக்கமையப் பார்த்தன் அங்குநான்.
4

முன்னை மிகப்பழமை இரணியனாம்-எந்தை
மூர்க்கந் தவிர்க்க வந்த நரசிங்கன் நீ;
பின்னையொர் புத்தனென நான் வளர்ந்திட்டேன்-ஒளிப்
பெண்மை அசோதரையென் றுன்னை யெய்தினேன்.
சொன்னவர் சாத்திரத்தில மிகவல்லர் காண்;-அவர்
சொல்லிற் பழுதிருக்கக் காரண மில்லை;
இன்னுங் கடைசிவரை ஒட்டிருக்குமாம்;-இதில்
ஏதுக்கு நாண முற்றுக் கண்புதைப்பதே?
5

குறிப்பு :
இந்த உறவு நேற்று முன்னாளில் வந்த உறவல்ல.
பாரதி இங்கு தன்னை ராமன், கண்ணன்,நரசிங்கன்,பின்னர் புத்தன் என்றும் பாவித்து 
கொள்கிறார்.காதலியை அசொதரை(புத்தரின் மனைவி) என்ன்பதாக பாவிக்கிறார். 

இது மனிதர் காதலல்ல.அதையும் தாண்டி புனிதமானது. என்கிறாரோ?  



No comments:

Post a Comment