Friday, August 24, 2012

கடவுள் எங்கே இருக்கிறார்?-kadavul engeyirukkirar

கடவுள் எங்கே இருக்கிறார்? 

"சொல்லடா ஹரியென்ற கடவுள் எங்கே? 
சொல்" லென்று ஹிரணியன் தான் உறுமி கேட்க 
நல்லதொரு மகன் சொல்வான் - தூணி லுள்ளான் 

நாரா யணன்துரும்பி லுள்ளான்' என்றான்
வல்லபெருங் கடவுளிலா அணுவொன் றில்லை
மஹாசக்தி யில்லாத வஸ்து வில்லை
அல்லலில்லை அல்லலில்லை அல்ல லில்லை
அனைத்துமே தெய்வமென்றால் அல்லலுண்டோ?

கேளப்பா, சீடனே! கழுதை யொன்றைக்
கீழான பன்றியினைத் தேளைக் கண்டு
தாளைப்பார்த் திருகரமுஞ் சிரமேற் கூப்பிச்
சங்கரசங் கரவென்று பணிதல் வேண்டும்
கூளத்தை மலத்தினையும் வணங்கல் வேண்டும்
கூடிநின்ற பொருளனைத்தின் கூட்டமே தெய்வம்
மீளத்தான் இதைத்தெளிவா விரித்துச் சொல்வேன்;
விண்மட்டும் கடவுளன்று மண்ணும் அஃதே

சுத்தஅறி வேசிவமென் றுரைத்தார் மேலோர்
சுத்தமண்ணும் சிவமென்றே உரைக்கும் வேதம்
வித்தகனாம் குருசிவமென் றுரைத்தார் மேலோர்
வித்தையிலாப் புலையனு ம்ஃதென்னும் வேதம்
பித்தரே அனைத்துயிருங் கடவு ளென்று
பேசுவது மெய்யானால் பெண்டி ரென்றும்
நித்தநும தருகினிலே குழந்தை யென்றும்
நிற்பனவுந் தெய்வமன்றோ நிகழ்த்து வீரே

உயிர்களெல்லாம் தெய்வமன்றிப் பிறவொன் றில்லை
ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்
பயிலுமுயிர் வகைமட்டு மின்றி யிங்குப்
பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்
வெயிலளிக்கும் இரவி, மதி, விண்மீன், மேகம்
மேலுமிங்குப் பலபலவாம் தோற்றங் கொண்டே
இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்
எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்! 

No comments:

Post a Comment