Showing posts with label bharathiyar-ஒளியும் இருளும். Show all posts
Showing posts with label bharathiyar-ஒளியும் இருளும். Show all posts

Friday, August 24, 2012

ஒளியும் இருளும்-Oliyum Irulum

ஒளியும் இருளும் 

வானமெங்கும் பரிதியின் சோதி; 
மலைகள் மீதும் பரிதியின் சோதி; 
தானை நீர்க்கடல் மீதிலும் ஆங்கே 

தரையின் மீதும் தருக்களின் மீதும்
கானகத்திலும் பற்பல ஆற்றின்
கரைகள் மீதும் பரிதியின் சோதி;
மானவன்றன் உளத்தினில் மட்டும்
வந்து நிற்கும் ருளிது வென்னே!
சோதி என்னும் கரையற்ற வெள்ளம்
தோன்றி எங்கும் திரைகொண்டு பாய,
சோதி என்னும் பெருங்கடல் சோதிச்
சூறை மாசறு சோதி யனந்தம்,
சோதி என்னும் நிறைவிஃ துலகைச்
சூழ்ந்து நிற்ப ஒருதனி நெஞ்சம்
சோதி யன்றதொர் சிற்றிருள் சேரக்
குமைந்து சோரும் கொடுமையி தென்னே!
தேம லர்க்கொர் அமுதன்ன சோதி,
சேர்ந்து புள்ளினம் வாழ்த்திடும் சோதி,
காம முற்று நிலத்தொடு நீரும்
காற்றும் நன்கு தழுவி நகத்தே
தாமயங்கிநல் லின்புறுஞ் சோதி
தரணி முற்றும் ததும்பியிருப்ப,
தீமை கொண்ட புலையிருள் சேர்ந்தோர்
சிறிய நெஞ்சந் தியங்குவ தென்னே!
நீர்ச்சு னைகணம் மின்னுற் றிலக
நெடிய குன்றம் நகைத்தெழில் கொள்ள.
கார்ச்ச டைக்கரு மேகங்க ளெல்லாம்
கனக மொத்துச் சுடர்கொண் டுலாவ,
தேர்ச்சி கொண்டுபல் சாத்திரம் கற்றும்
தெவிட்டொ ணாதநல் லின்பக் கருவாம்
வேர்ச்சுடர் பரமாண் பொருள் கேட்டும்
மெலிவோர் நெஞ்சிடை மேவுதல் என்னே!