Thursday, November 29, 2012

ஆத்ம ஜயம்

ஆத்ம ஜயம்

கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள்
கவர்ந்திட மாட்டாவோ?-அட
மண்ணில் தெரியுது வானம்,அதுநம்
வசப்பட லாகாதோ?
எண்ணி யெண்ணிப் பல நாளு முயன்றிங்
கிறுதியிற் சோர்வோமோ,
விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும்
மேவு பராசக்தியே!

என்ன வரங்கள்,பெருமைகள்,வெற்றிகள்
எத்தனை மேன்மைகளோ!
தன்னை வென்றா லவை யாவும் பெறுவது
சத்திய மாகுமென்றே
முன்னை முனிவர் உரைத்த மறைப் பொருள்
முற்றுமுணர்ந்த பின்னும்
தன்னை வென்றாளும் திறமை பெறாதிங்கு
தாழ்வுற்று நிற்போமோ?

மாயையைப் பழித்தல்

ராகம்-காம்போதி தாளம்-ஆதி
மாயையைப் பழித்தல்

 உண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ?
மாயையே!-மனத்
திண்மையுள்ளாரை நீ செய்வது
மொன்றுண்டோ!-மாயையே!

எத்தனை கோடி படைகொண்டு வந்தாலும்
மாயையே! நீ
சித்தத் தெளிவெனுந் தீயின்முன்

நிற்பாயோ?-மாயையே!

என்னைக் கெடுப்பதற் கெண்ணமுற்றாய்
கெட்ட மாயையே!-நான்
உன்னைக் கெடுப்ப துறுதியென்
றேயுணர் மாயையே!

சாகத் துணியிற் சமுத்திர மெம்மட்டு
மாயையே!-இந்தத்
தேகம் பொய் யென்றுணர் துரரை யென்
செய்வாய் மாயையே!

இருமை யழிந்தபின் எங்கிருப்பாய்,அற்ப
மாயையே!-தெளிந்
தொருமை கண்டோர் முன்னம் ஓடாது
நிற்பையோ?-மாயையே!

நீதரும் இன்பத்தை நேரென்று கொள்வனோ
மாயையே-சிங்கம்
நாய்தரக் கொள்ளுமோ நல்லர
சாட்சியை-மாயையே!
என்னிச்சை கொண்டுனை யெற்றிவிட
வல்லேன் மாயையே!-இனி
உன்னிச்சை கொண்டெனக் கொன்றும்
வராது காண்-மாயையே!

யார்க்கும் குடியல்லேன் யானென்ப
தோர்ந்தனன் மாயையே!-உன்தன்
போர்க்கஞ்சு வேனோ பொடியாக்குவேன்
உன்னை-மாயையே!

விடுதலை வேண்டும்.

விடுதலை வேண்டும்.

ராகம்-நாட்டை

பல்லவி

வேண்டுமடி எப்போதும் விடுதலை அம்மா!

சரணங்கள்

தூண்டு மின்ப வாடை வீசு துய்ய தேன் கடல்
சூழ நின்ற தீவி லங்கு சோதி வானவர்
ஈண்டு நமது தோழ ராகி எம்மொ டமுத முண்டுகலவ
நீண்ட மகிழ்ச்சி மூண்டு விளைய நினைத்திடு மின்ப மனைத்தும் உதவ (வேண்டுமடி)

விருத்தி ராதி தானவர்க்கு மெலிவ தின்றியே,
விண்ணு மண்ணும் வந்து பணிய மேன்மை துன்றியே,
பொருத்த முறநல் வேத மோர்ந்து பொய்மை தீர மெய்மை நேர
வருத்த மழிய வறுமை யொழிய வையம் முழுதும வண்மை பொழிய
(வேண்டுமடி)

பண்ணில் இனிய பாடலோடு பாயு மொளியெலாம்
பாரில் எம்மை உரிமை கொண்டு பற்றி நிற்கவே,
நண்ணி யமரர் வெற்றி கூற நமது பெண்கள் அமரர் கொள்ள
வண்ண மினிய தேவ மகளிர் மருவ நாமும் உவகை துள்ள
(வேண்டுமடி)

சங்கு

சங்கு

செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம்
சேர்ந்திடலா மென்றே எண்ணி யிருப்பார்
பித்த மனிதர்,அவர் சொலுஞ் சாத்திரம்
பேயுரை யாமென்றிங் கூதேடா சங்கம்!

இத்தரை மீதினி லேயிந்த நாளினில்
இப்பொழு தேமுக்தி சேர்ந்திட நாடிச்
சுத்த அறிவு நிலையிற் களிப்பவர்

தூயவ ராமென்றிங் கூதேடா சங்கம்!

பொய்யுறு மாயையைப் பொய்யெனக் கொண்டு,
புலன்களை வெட்டிப் புறத்தில் எறிந்தே
ஐயுற லின்றிக் களித்திருப்பாரவர்
ஆரிய ராமென்றிங் கூதேடா சங்கம்!

மையுறு வாள்விழி யாரையும் பொன்னையும்
மண்ணெனக் கொண்டு மயக்கற்றிருந்தாரே,
செய்யுறு காரியம் தாமன்றிச் செய்வார்
சித்தர்க ளாமென்றிங் கூதேடா சங்க

Sunday, November 25, 2012

வேய்ங்குழல்

வேய்ங்குழல் 

எங்கிருந்து வருகுவதோ?-ஒலி 
யாவர் செய்குவதோ?-அடி தோழி!
1)
குன்றினின்றும் வருகுவதோ?-மரக் 
கொம்பினின்றும் வருகுவதோ?-வெளி 
மன்றினின்று வருகுவதோ?-என்றன் 
மதிமருண்டிடச் செய்குதடி!-இஃது (எங்கிருந்து)
2)

அலையொலித்திடும் தெய்வ -யமுனை
யாற்றினின்றும் ஒலிப்பதுவோ?-அன்றி
இலையொலிக்கும் பொழிலிடை நின்றும்
எழுவதோ இஃதின்னமுதைப்போல்?(எங்கிருந்து)
3)
காட்டினின்றும் வருகுவதோ? -நிலாக்
காற்றைக் கொண்டு தருகுவதோ?-வெளி
நாட்டினின்றுமித் தென்றல் கொணர்வதோ?
நாதமிஃதென் உயிரையுருக்குதே!(எங்கிருந்து)
4)
பறவை யேதுமொன்றுள்ளதுவோ!-இங்ஙன்
பாடுமோ அமுதக் கனற்பாட்டு?
மறைவினின்றுங் கின்னரராதியர்
வாத்தியத்தினிசை யிதுவோ அடி!(எங்கிருந்து)
5)
கண்ணனூதிடும் வேய்ங்குழல் தானடி!
காதிலேயமு துள்ளத்தில் நஞ்சு ,
பண்ணன்றாமடி பாவையர்வாடப்
யெய்திடும் அம்படி தோழி!(எங்கிருந்து)

Saturday, September 29, 2012

வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே-Vetri ettuth thikkumetta kottu murase


முரசு 

வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே! 
வேதம் என்றும் வாழ்கஎன்று கொட்டு முரசே! 
நெற்றி யொற்றைக் கண்ணானோடே நிர்த்தனம் செய்தாள் 
நித்த சக்தி வாழ்க வென்று கொட்டு முரசே! 

ஊருக்கு நல்லது சொல்வேன் - என்க் 
குண்மை தெரிந்தது சொல்வேன் 
சீருக் கெல்லாம் முதலாகும் - ஒரு 
தெய்வம் துணைசெய்ய வேண்டும் 

வேத மறிந்தவன் பார்ப்பான், பல 
வித்தை தெரிந்தவன் பார்ப்பான் 
நீதி நிலைத்தவ றாமல் - தண்ட 
நெமங்கள் செய்பவன் நாய்க்கன் 

பண்டங்கள் விற்பவன் செட்டி - பிறை 
பட்டினி தீர்ப்பவன் செட்டி 
தொண்டரென் றோர்வகுப் பில்லை - தொழில் 
சோம்பலைப் போல்இழி வில்லை 

நாலு வகுப்புமிங் கொன்றே - இந்த 
நான்கினில் ஒன்று குறைந்தால் 
வேலை தவறிச் சிதைந்தே - செத்து 
வீழ்ந்திடும் மானிடச் சாதி 

ஒற்றைக் குடும்பந் தனிலே - பொருள் 
ஓங்க வளர்ப்பவன் தந்தை 
மற்றை கருமங்கள் செய்தே - மனை 
வாழ்ந்திடச் செய்பவள் அன்னை 

ஏவல்கள் செய்பவள் மக்கள்! - இவர் 
யாவரும் ஓர்குலம் அன்றோ? 
மேவி அனைவரும் ஒன்றாய் - நல்ல 
வீடு நடத்துதல் கண்டோம் 

சாதிப் பிரிவுகள் சொல்லி - அன்பு 
தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார் 
நீதிப் பிரிவுகள் செய்வார் - அங்கு 
நித்தமும் சண்டைகள் செய்வார் 

சாதிப் கொடுமைகள் வேண்டாம் - அன்பு 
தன்னில் செழித்திடும் வையம் 
ஆதர வுற்றிங்கு வாழ்வோம் - தொழில் 
ஆயிரம் மாண்புறச் செய்வோம் 

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி 
பேணி வளர்த்திடும் ஈசன் 
மண்ணுக் குள்ளே சிலமூடர் - நல்ல 
மாத ரறிவைக் கெடுத்தார் 

கண்கள் இரண்டில் ஒன்றைக் - குத்திக் 
காட்சி கெடுத்திட லாமோ? 
பெண்க ளறிவை வளர்த்தால் - வையம் 
பேதைமை யற்றிடுங் காணீர் 

வானிற் பறக்கின்ற புள்ளெலாநான்-vanir parakkinra pulelaanaan


நான் 

வானிற் பறக்கின்ற புள்ளெலாநான் 
மண்ணிற் றிரியும் விலங்கெலாநான் 
கானிழல் வளரு மரமெலாநான் 
காற்றும் புனலுங் கடலுமேநான். 

விண்ணிற் றெரிகின்ற மீனெலாநான் 
வெட்ட வெளியின் விரிவெலாநான் 
மண்ணிற் கிடக்கும் புழுவெலாநான் 
வாரியி லுள்ள வுயிரெலாநான். 

கம்ப னிசைத்த கவியெலாநான் 
காருகர் தீட்டு முருவெலாநான் 
இம்பர் வியக்கின்ற மாட கூடம் 
எழினகர் கோபுரம் யாவுமேநான். 

இன்னிசைமாத ரிசையுளேனான் 
இன்பத் திரள்க ளனைத்துமேநான் 
புன்னிலை மாந்தர்தம் பொய்யெலாநான் 
பொறையருந் துன்பப் புணர்ப்பெலாநான். 

மந்திரங் கோடி யியக்குவோனான் 
இயங்கு பொருளி னியல்பெலாநான் 
தந்திரங் கோடி சமைத்துளோனான் 
சாத்திர வேதங்கள் சாற்றினோனான். 

அண்டங்கள் யாவையு மாக்கினோனான் 
அவைபிழை யாமே சுழற்றுவோனான் 
கண்டநற் சக்திக் கணமெலாநான் 
காரண மாகிக் கதித்துளோனான்.