வேள்விப் பாட்டு
இயற்கையென் றுனையுரைப்பார் - சிலர்
இணங்குமைம் பூதங்க ளென்றிசைப்பார்
செயற்கையின் சக்தியென்பார் - உயிர்த்
தீயென்பர், அறிவென்பர், ஈசனென்பர்
வியப்புறு தாய்நினக்கே - இங்கு
வேள்விசெய் திடுமெங்கள் 'ஓம்' என்னும்
நயப்படு மதுவுண்டே - சிவ
நாட்டியங் காட்டிநல் லருள்புரிவாய்.
அன்புறு சோதியென்பார் - சிலர்
ஆரிருட் காளியென் றுனைப்புகழ்வார்
இன்பமென் றுரைத்திடுவார் - சிலர்
எண்ணருந் துன்பமென் றுனையிசைப்பார்
புன்பலி கொண்டுவந்தோம் - அருள்
பூண்டெமைத் தேவர்தங் குலத்திடுவாய்
மின்படு சிவசக்தி - எங்கள்
வீரைநின் திருவடி சரண்புகுந்தோம்.
உண்மையி லமுதாவாய் - புண்கள்
ஒழித்திடு வாய்களி யுதவிடுவாய்
வன்மைகொ ளுயிர்ச்சுடராய் - இங்கு
வளர்ந்திடு வாயென்று மாய்வதிலாய்
ஒண்மையும் ஊக்கமுந்தான் - என்றும்
ஊறிடுந் திருவருட் சுனையாவாய்
அண்மையி லென்றுநின்றே - எம்மை
ஆதரித் தருள்செயும் விரதமுற்றாய்.
தெளிவுறு மறிவினைநாம் - கொண்டு
சேர்த்தனம், நினக்கது ஸோமரஸம்
ஒளியுறு முயிர்ச்செடியில் - இதை
ஓங்கிடு மதிவலி தனிற் பிழிந்தோம்
களியுறக் குடித்திடுவாய் - நின்றன்
களிநடங் காண்பதற் குளங்கனிந்தோம்
குளிர்ச்சுவைப் பாட்டிசைத்தே - சுரர்
குலத்தினிற் சேர்ந்திடல் விரும்புகின்றோம்.
அச்சமுந் துயருமென்றே - இரண்
டசுரர்வந் தெமையிங்கு சூழ்ந்துநின்றார்.
துச்சமிங் கிவர்படைகள் - பல
தொல்லைகள் கவலைகள் சாவுகளாம்
இச்சையுற் றிவரடைந்தார் - எங்கள்
இன்னமு தைக்கவர்ந் தேகிடவே
பிச்சையிங் கெமக்களித்தாய் - ஒரு
பெருநக ருடலெனும் பெயரினதாம்.
கோடிமண் டபந்திகழும் - திறற்
கோட்டையிங் கிதையவர் பொழுதனைத்தும்
நாடிநின் றிடர்புரிவார் - உயிர்
நதியினைத் தடுத்தெமை நலித்திடுவார்
சாடுபல் குண்டுகளால் - ஒளி
சார்மதிக் கூடங்கள் தகர்த்திடுவார்
பாடிநின் றுனைப்புகழ்வோம் - எங்கள்
பகைவரை அழித்தெமைக் காத்திடுவாய்.
நின்னருள் வேண்டுகின்றோம் - எங்கள்
நீதியுந் தர்மமும் நிலைப்பதற்கே
பொன்னவிர் கோயில்களும் - எங்கள்
பொற்புடை மாதரு மதலையரும்
அன்னநல் லணிவயல்கள் - எங்கள்
ஆடு மாடுகள் குதிரைகளும்
இன்னவை காத்திடவே - அன்னை
இணைமலர்த் திருவடி துணைபுகுந்தோம்.
எம்முயி ராசைகளும் - எங்கள்
இசைகளுஞ் செயல்களுந் துணிவுகளும்
செம்மையுற் றிடவருள்வாய் - நின்றன்
சேவடி யடைக்கலம் புகுந்துவிட்டோம்.
மும்மையின் உடைமைகளும் - திரு
முன்னரிட் டஞ்சலி செய்துநிற்போம்
அம்மைநற் சிவசக்தி - எமை
அமரர்தந் நிலையினி லாக்கிடுவாய்.
No comments:
Post a Comment