Saturday, September 29, 2012

வேள்விப் பாட்டு- இயற்கையென் றுனையுரைப்பார்-Velvi pattu




வேள்விப் பாட்டு 

இயற்கையென் றுனையுரைப்பார் - சிலர் 
இணங்குமைம் பூதங்க ளென்றிசைப்பார் 
செயற்கையின் சக்தியென்பார் - உயிர்த் 
தீயென்பர், அறிவென்பர், ஈசனென்பர் 
வியப்புறு தாய்நினக்கே - இங்கு 
வேள்விசெய் திடுமெங்கள் 'ஓம்' என்னும் 
நயப்படு மதுவுண்டே - சிவ 
நாட்டியங் காட்டிநல் லருள்புரிவாய். 

அன்புறு சோதியென்பார் - சிலர் 
ஆரிருட் காளியென் றுனைப்புகழ்வார் 
இன்பமென் றுரைத்திடுவார் - சிலர் 
எண்ணருந் துன்பமென் றுனையிசைப்பார் 
புன்பலி கொண்டுவந்தோம் - அருள் 
பூண்டெமைத் தேவர்தங் குலத்திடுவாய் 
மின்படு சிவசக்தி - எங்கள் 
வீரைநின் திருவடி சரண்புகுந்தோம். 

உண்மையி லமுதாவாய் - புண்கள் 
ஒழித்திடு வாய்களி யுதவிடுவாய் 
வன்மைகொ ளுயிர்ச்சுடராய் - இங்கு 
வளர்ந்திடு வாயென்று மாய்வதிலாய் 
ஒண்மையும் ஊக்கமுந்தான் - என்றும் 
ஊறிடுந் திருவருட் சுனையாவாய் 
அண்மையி லென்றுநின்றே - எம்மை 
ஆதரித் தருள்செயும் விரதமுற்றாய். 

தெளிவுறு மறிவினைநாம் - கொண்டு 
சேர்த்தனம், நினக்கது ஸோமரஸம் 
ஒளியுறு முயிர்ச்செடியில் - இதை 
ஓங்கிடு மதிவலி தனிற் பிழிந்தோம் 
களியுறக் குடித்திடுவாய் - நின்றன் 
களிநடங் காண்பதற் குளங்கனிந்தோம் 
குளிர்ச்சுவைப் பாட்டிசைத்தே - சுரர் 
குலத்தினிற் சேர்ந்திடல் விரும்புகின்றோம். 

அச்சமுந் துயருமென்றே - இரண் 
டசுரர்வந் தெமையிங்கு சூழ்ந்துநின்றார். 
துச்சமிங் கிவர்படைகள் - பல 
தொல்லைகள் கவலைகள் சாவுகளாம் 
இச்சையுற் றிவரடைந்தார் - எங்கள் 
இன்னமு தைக்கவர்ந் தேகிடவே 
பிச்சையிங் கெமக்களித்தாய் - ஒரு 
பெருநக ருடலெனும் பெயரினதாம். 

கோடிமண் டபந்திகழும் - திறற் 
கோட்டையிங் கிதையவர் பொழுதனைத்தும் 
நாடிநின் றிடர்புரிவார் - உயிர் 
நதியினைத் தடுத்தெமை நலித்திடுவார் 
சாடுபல் குண்டுகளால் - ஒளி 
சார்மதிக் கூடங்கள் தகர்த்திடுவார் 
பாடிநின் றுனைப்புகழ்வோம் - எங்கள் 
பகைவரை அழித்தெமைக் காத்திடுவாய். 

நின்னருள் வேண்டுகின்றோம் - எங்கள் 
நீதியுந் தர்மமும் நிலைப்பதற்கே 
பொன்னவிர் கோயில்களும் - எங்கள் 
பொற்புடை மாதரு மதலையரும் 
அன்னநல் லணிவயல்கள் - எங்கள் 
ஆடு மாடுகள் குதிரைகளும் 
இன்னவை காத்திடவே - அன்னை 
இணைமலர்த் திருவடி துணைபுகுந்தோம். 

எம்முயி ராசைகளும் - எங்கள் 
இசைகளுஞ் செயல்களுந் துணிவுகளும் 
செம்மையுற் றிடவருள்வாய் - நின்றன் 
சேவடி யடைக்கலம் புகுந்துவிட்டோம். 
மும்மையின் உடைமைகளும் - திரு 
முன்னரிட் டஞ்சலி செய்துநிற்போம் 
அம்மைநற் சிவசக்தி - எமை 
அமரர்தந் நிலையினி லாக்கிடுவாய். 

No comments:

Post a Comment