உடன்பிறந் தார்களைப் போலே - இவ்
வுலகில் மனிதரெல் லாரும்
இடம்பெரி துண்டுவை யத்தில் - இதில்
ஏதுக்கு சண்டைகள் செய்வீர்?
மரத்தினை நட்டவன் தண்ணீர் - நஙு
வார்த்ததை ஓங்கிடச் செய்வான்
சிரத்தை யுடையது தெய்வம் - இங்கு
சேர்த்த உணவெல்லை யில்லை
வயிற்றுக்குச் சோறுண்டு கண்டீர்! - இங்கு
வாழும் மனிதரெல் லோருக்கும்
பயிற்றி உழுதுண்டு வாழ்வீர்! - பிறை
பங்கைத் திருடுதல் வேண்டாம்
உடன்பிறந் தவர்களைப் போலே - இவ்
வுலகினில் மனிதரெல் லாரும்
திடங்கொண் டவர்மெலிந் தோரை - இங்குத்
தின்று பிழைத்திட லாமோ?
வலிமை யுடையது தெய்வம் - நம்மை
வாழ்ந்திடச் செய்வது தெய்வம்
மெலிவுகண் டாலும் குழந்தை - தன்னை
வீழ்த்தி மிதத்திட லாமோ?
தம்பி சற்றே மெலிவானால் - அண்ணன்
தனடிமை கொள்ள லாமோ?
செம்புக்கும் கொம்புக்கும் அஞ்சி - மக்கள்
சிற்றடி மைப்பட லாமோ?
அன்பென்று கொட்டு முரசே! - அதில்
யார்க்கும் விடுதலை உண்டு
பின்பு மனிதர்க ளெல்லாம் - கல்வி
பெற்றுப் பதம்பெற்று வாழ்வார்
அறிவை வளர்த்திட வேண்டும் - மக்கள்
அத்தன பேருக்கும் ஒன்றாய்
சிறியரை மேம்படச் செய்தால் - பின்பு
தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்
பாருக்குள்ளே சமத்தன்மை - தொடர்
பற்றுஞ் சகோதரத் தன்மை
யாருக்கும் தீமைசெய் யாது - புவி
யெங்கும் விடுதலை செய்யும்
வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு
வாழும் மனிதருக் கெல்லாம்
பயிற்றிப் பலகல்வி தந்து - இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்
ஒன்றென்று கொட்டு முரசே! - அன்பில்
ஓங்கென்று கொட்டு முரசே !
நன்றென்று கொட்டு முரசே! இந்த
நானில் மாந்தருக் கெல்லாம்
No comments:
Post a Comment