போற்றி யகவல்
போற்றி உலகொரு மூன்றையும் புணர்ப்பாய்!
மாற்றுவாய், துடைப்பாய், வளர்ப்பாய், காப்பாய்!
கனியிலே சுவையும் காற்றிலே யியக்கமும்
கலந்தாற் போலநீ அனைத்திலும் கலந்தாய்.
உலகெலாந் தானா யொளிர்வாய், போற்றி!
அன்னை, போற்றி! அமுதமே, போற்றி!
புதியதிற் புதுமையாய், முதியதில் முதுமையாய்,
உயிரிலே யுயிராய்,றப்பிலு முயிராய்,
உண்டெனும் பொருளி லுண்மையாய், என்னுளே
நானெனும் பொருளாய், நானையே பெருக்கித்
தானென மாற்றுஞ் சாகாச் சுடராய்,
கவலைநோய் தீர்க்கு மருந்தின் கடலாய்,
பிணியிருள் கெடுக்கும் பேரொளி ஞாயிறாய்,
யானென தின்றி யிருக்குநல் யோகியர்
ஞானமா மகுட நடுத்திகழ் மணியாய்,
செய்கையாய், ஊக்கமாய், சித்தமாய், அறிவாய்
நின்றிடுந் தாயே, நித்தமும் போற்றி!
இன்பங் கேட்டேன், ஈவாய் போற்றி!
துன்பம் வேண்டேன், துடைப்பாய் போற்றி!
அமுதங் கேட்டேன், அளிப்பாய் போற்றி!
சக்தி, போற்றி! தாயே, போற்றி!
முக்தி, போற்றி! மோனமே, போற்றி!
சாவினை வேண்டேன், தவிர்ப்பாய் போற்றி!
No comments:
Post a Comment