குயிலும் குரங்கும்- Kuyilum Kurankum
மற்றைநாட் கண்ட மரத்தே குயிலில்லை.
சுற்றுமுற்றும் பார்த்துத் துடித்து வருகையிலே,-
வஞ்சனையே! பெண்மையே! மன்மதனாம் பொய்த்தேவே!
நெஞ்சகமே! தொல்விதியி னீதியே! பாழுலகே!-
கண்ணாலே நான்கண்ட காட்சிதனை யென்னுரைப்பேன்!
பெண்ணா லறிவிழக்கும் பித்தரெலாங் கேண்மினோ!
காதலினைப் போற்றுங் கவிஞரெலாங் கேண்மினோ!
மாயக் குயிலோர் மரக்கிளையில் வீற்றிருந்தே
பாயும் விழிநீர் பதைக்குஞ் சிறியவுடல்
விம்மிப் பரிந்துசொலும் வெந்துயர்ச்சொல் கொண்டதுவாய்,
அம்மவோ! மற்றாங்கோ ராண்குரங்கு தன்னுடனே
ஏதேதோ கூறி யிரங்கு நிலைகண்டேன்.
தீதேது? நன்றேது? செய்கைத் தெளிவேது?
அந்தக் கணமே அதையுங் குரங்கினையும்
சிந்தக் கருதி உடைவாளிற் கைசேர்த்தேன்.
கொன்றுவிடு முன்னே, குயிலுரைக்கும் வார்த்தைகளை
நின்றுசற்றே கேட்பதற்கென் நெஞ்சம் விரும்பிடவும்.
ஆங்கவற்றின் கண்ணில் அகப்படா வாறருகே
ஓங்கு மரத்தின்பால் ஒளிந்துநின்று கேட்கையிலே,
பேடைக் குயிலிதனைப் பேசியது:- "வானரரே,
ஈடறியா மேன்மையழ கேய்ந்தவரே, பெண்மைதான்
எப்பிறப்புக் கொண்டாலும், ஏந்தலே, நின்னழகைத்
தப்புமோ? மையல் தடுக்குந் தரமாமோ?
மண்ணிலுயிர்க் கெல்லாந் தலைவரென மானிடரே
எண்ணிநின்றார் தம்மை; எனிலொருகால், ஊர் வகுத்தல்,
கோயில், அரசு, குடிவகுப்புப் போன்றசில
வாயிலிலே, அந்த மனித ருயர்வெனலாம்.
மேனி யழகினிலும், விண்டுரைக்கும் வார்த்தையிலும்,
கூனி யிருக்கும் கொலுநேர்த்தி தன்னிலுமே,
வானரர்தஞ சாதிக்கு மாந்தர்நிக ராவாரோ?
ஆன வரையு மவர்முயன்று பார்த்தாலும்,
பட்டுமயிர் மூடப் படாத தமதுடலை
எட்டுடையால் மூடி யெதிருமக்கு வந்தாலும்,
மீசையையும் தாடியையும் விந்தைசெய்து வானரர்தம்
ஆசை முகத்தினைப்போ லாக்க முயன்றிடினும்,
ஆடிக் குதிக்கும் அழகிலுமை நேர்வதற்கே
கூடிக் குடித்துக் குதித்தாலும், கோபுரத்தில்
ஏறத் தெரியாமல் ஏணிவைத்துச் சென்றாலும்,
வேறெத்தைச் செய்தாலும், வேகமுறப் பாய்வதிலே
வானரர் போலாவரோ? வாலுக்குப் போவதெங்கே?
ஈனமுறுங் கச்சை யிதற்கு நிகராமோ?
No comments:
Post a Comment