அம்மா கதை சொல்வாள்-Amma kathai solval
உண்ண உண்ணத் தெவிட்டாதே - அம்மை
உயிரெனும் முலையினில் உணர்வெனும்பால்;
வண்ணமுற வைத்தெனக்கே - என்றன்
வாயினிற் கொண் டூட்டுமோர் வண்மையுடையாள்,
கண்ணனெனும் பெயருடையாள், - என்னைக்
கட்டிநிறை வான்எனுந்தன் கையிலணைத்து
மண்ணெனுந்தன் மடியில் வைத்தே - பல
மாயமுறுங் கதைசொல்லி மனங்களிப்பாள்.
இன்பமெனச் சிலகதைகள் - எனக்
கேற்றமென்றும் வெற்றியென்றும் சில கதைகள்
துன்பமெனச் சிலகதைகள் - கெட்ட
தோல்வியென்றும் வீழ்ச்சியென்றுஞ் சிலகதைகள்
என்பருவம் என்றன்விருப்பம் - எனும்
இவற்றினுக் கிணங்கவென் னுளமறிந்தே
அன்பொடவள் சொல்லிவருவாள்;- அதில்
அற்புதமுண் டாய்ப்பர வசமடைவேன்.
விந்தைவிந்தை யாகவெனக்கே - பல
விதவிதத் தோற்றங்கள் காட்டுவிப்பாள்;
சந்திரனென் றொருபொம்மை - அதில்
தண்ணமுதம் போலஒளி பரந்தொழுகும்;
மந்தை மந்தை யாமேகம் - பல
வன்னமுறும் பொம்மையது மழைபொழியும்;
முந்தஒரு சூரியனுண்டு - அதன்
முகத்தொளி கூறுதற்கொர் மொழியிலையே.
வானத்து மீன்க ளுண்டு - சிறு
மணிகளைப் போல்மின்னி நிறைந்திருக்கும்;
நானத்தைக் கணக்கிடவே - மன
நாடிமிக முயல்கினுங் கூடுவதில்லை;
கானத்து மலைகளுண்டு - எந்தக்
காலமுமொ ரிடம் விட்டு நகர்வதில்லை,
மோனத்திலே யிருக்கும் - ஒரு
மொழியுரை யாதுவிளை யாடவருங்காண்.
நல்லநல்ல நதிகளுண்டு - அவை
நாடெங்கு மோடிவிளை யாடிவருங்காண்;
மெல்லமெல்லப் போயவைதாம் - விழும்
விரிகடற் பொம்மையது மிகப்பெரிதாம்;
எல்லையதிற் காணுவதில்லை;- அலை
எற்றிநுரை கக்கியொரு பாட்டிசைக்கும்;
ஒல்லெனுமப் பாட்டினிலே - அம்மை
ஒமெனும் பெயரென்றும் ஒலித்திடுங்காண்.
சோலைகள் காவினங்கள் - அங்கு
சூழ்தரும் பலநிற மணிமலர்கள்
சாலவு மினியனவாய் - அங்கு
தருக்களில் தூங்கிடும் கனிவகைகள்
ஞாலமுற் றிலுநிறைந்தே - மிக
நயந்தரு பொம்மைக ளெனக் கெனவே
கோலமுஞ் சுவையுமுற - அவள்
கோடிபல் கோடிகள் குவித்துவைத்தாள்.
தின்றிடப் பண்டங்களும் - செவி
தெவிட்டறக் கேட்கநற் பாட்டுகளும்
ஒன்றுறப் பழகுதற்கே - அறி
வுடையமெய்த் தோழரு மவள்கொடுத்தாள்;
கொன்றிடு மெனனிதாய் - இன்பக்
கொடுநெருப் பாய், அனற் சுவையமுதாய்,
நன்றியல் காதலுக்கே - இந்த
நாரியர் தமையெனைச் சூழவைத்தாள்.
இறகுடைப் பறவைகளும் - நிலந்
திரிந்திடும் விலங்குகள் ஊர்வனகள்
அறைகடல் நிறைந்திடவே - எண்ணில்
அமைத்திடற் கரியபல் வகைப்படவே
சுறவுகள் மீன்வகைகள் - எனத்
தோழர்கள் பலருமிங் கெனக்களித்தாள்;
நிறைவுற ன்பம்வைத்தாள்;- அதை
நினைக்கவு முழுதிலுங் கூடுதில்லை,
சாத்திரங் கோடிவைத்தாள்;- அவை
தம்மினு முயர்ந்ததொர் ஞானம்வைத்தாள்;
மீத்திடும் பொழுதினிலே - நான்
வேடிக்கை யுறக்கண்டு நகைப்பதற்கே.
கோத்தபொய் வேதங்களும் - மதக்
கொலைகளும் அரசர்தம் கூத்துக்களும்
மூத்தவர் பொய்ந்நடையும் - இள
மூடர்தம் கவலையு மவள்புனைந்தாள்;
வேண்டிய கொடுத்திடுவாள்;- அவை
விரும்புமுன் கொடுத்திட விரைந்திடுவாள்;
ஆண்டருள் புரிந்திடுவாள்;- அண்ணன்
அருச்சுனன் போலெனை யாக்கிடுவாள்;
யாண்டுமெக் காலத்திலும் - அவள்
இன்னருள் பாடுநற் றொழில்புரிவேன்;
நீண்டதோர் புகழ்வாழ்வும் - பிற
நிகரறு பெருமையு மவள்கொடுப்பாள்.
No comments:
Post a Comment