Saturday, September 1, 2012

அம்மா கதை சொல்வாள்-Amma kathai solval


அம்மா கதை சொல்வாள்-Amma kathai solval

உண்ண உண்ணத் தெவிட்டாதே - அம்மை 
உயிரெனும் முலையினில் உணர்வெனும்பால்; 
வண்ணமுற வைத்தெனக்கே - என்றன் 
வாயினிற் கொண் டூட்டுமோர் வண்மையுடையாள், 
கண்ணனெனும் பெயருடையாள், - என்னைக் 
கட்டிநிறை வான்எனுந்தன் கையிலணைத்து 
மண்ணெனுந்தன் மடியில் வைத்தே - பல 
மாயமுறுங் கதைசொல்லி மனங்களிப்பாள். 

இன்பமெனச் சிலகதைகள் - எனக் 
கேற்றமென்றும் வெற்றியென்றும் சில கதைகள் 
துன்பமெனச் சிலகதைகள் - கெட்ட 
தோல்வியென்றும் வீழ்ச்சியென்றுஞ் சிலகதைகள் 
என்பருவம் என்றன்விருப்பம் - எனும் 
இவற்றினுக் கிணங்கவென் னுளமறிந்தே 
அன்பொடவள் சொல்லிவருவாள்;- அதில் 
அற்புதமுண் டாய்ப்பர வசமடைவேன். 

விந்தைவிந்தை யாகவெனக்கே - பல 
விதவிதத் தோற்றங்கள் காட்டுவிப்பாள்; 
சந்திரனென் றொருபொம்மை - அதில் 
தண்ணமுதம் போலஒளி பரந்தொழுகும்; 
மந்தை மந்தை யாமேகம் - பல 
வன்னமுறும் பொம்மையது மழைபொழியும்; 
முந்தஒரு சூரியனுண்டு - அதன் 
முகத்தொளி கூறுதற்கொர் மொழியிலையே. 

வானத்து மீன்க ளுண்டு - சிறு 
மணிகளைப் போல்மின்னி நிறைந்திருக்கும்; 
நானத்தைக் கணக்கிடவே - மன 
நாடிமிக முயல்கினுங் கூடுவதில்லை; 
கானத்து மலைகளுண்டு - எந்தக் 
காலமுமொ ரிடம் விட்டு நகர்வதில்லை, 
மோனத்திலே யிருக்கும் - ஒரு 
மொழியுரை யாதுவிளை யாடவருங்காண். 

நல்லநல்ல நதிகளுண்டு - அவை 
நாடெங்கு மோடிவிளை யாடிவருங்காண்; 
மெல்லமெல்லப் போயவைதாம் - விழும் 
விரிகடற் பொம்மையது மிகப்பெரிதாம்; 
எல்லையதிற் காணுவதில்லை;- அலை 
எற்றிநுரை கக்கியொரு பாட்டிசைக்கும்; 
ஒல்லெனுமப் பாட்டினிலே - அம்மை 
ஒமெனும் பெயரென்றும் ஒலித்திடுங்காண். 
சோலைகள் காவினங்கள் - அங்கு 
சூழ்தரும் பலநிற மணிமலர்கள் 
சாலவு மினியனவாய் - அங்கு 
தருக்களில் தூங்கிடும் கனிவகைகள் 
ஞாலமுற் றிலுநிறைந்தே - மிக 
நயந்தரு பொம்மைக ளெனக் கெனவே 
கோலமுஞ் சுவையுமுற - அவள் 
கோடிபல் கோடிகள் குவித்துவைத்தாள். 

தின்றிடப் பண்டங்களும் - செவி 
தெவிட்டறக் கேட்கநற் பாட்டுகளும் 
ஒன்றுறப் பழகுதற்கே - அறி 
வுடையமெய்த் தோழரு மவள்கொடுத்தாள்; 
கொன்றிடு மெனனிதாய் - இன்பக் 
கொடுநெருப் பாய், அனற் சுவையமுதாய், 
நன்றியல் காதலுக்கே - இந்த 
நாரியர் தமையெனைச் சூழவைத்தாள். 

இறகுடைப் பறவைகளும் - நிலந் 
திரிந்திடும் விலங்குகள் ஊர்வனகள் 
அறைகடல் நிறைந்திடவே - எண்ணில் 
அமைத்திடற் கரியபல் வகைப்படவே 
சுறவுகள் மீன்வகைகள் - எனத் 
தோழர்கள் பலருமிங் கெனக்களித்தாள்; 
நிறைவுற ன்பம்வைத்தாள்;- அதை 
நினைக்கவு முழுதிலுங் கூடுதில்லை, 

சாத்திரங் கோடிவைத்தாள்;- அவை 
தம்மினு முயர்ந்ததொர் ஞானம்வைத்தாள்; 
மீத்திடும் பொழுதினிலே - நான் 
வேடிக்கை யுறக்கண்டு நகைப்பதற்கே. 
கோத்தபொய் வேதங்களும் - மதக் 
கொலைகளும் அரசர்தம் கூத்துக்களும் 
மூத்தவர் பொய்ந்நடையும் - இள 
மூடர்தம் கவலையு மவள்புனைந்தாள்; 

வேண்டிய கொடுத்திடுவாள்;- அவை 
விரும்புமுன் கொடுத்திட விரைந்திடுவாள்; 
ஆண்டருள் புரிந்திடுவாள்;- அண்ணன் 
அருச்சுனன் போலெனை யாக்கிடுவாள்; 
யாண்டுமெக் காலத்திலும் - அவள் 
இன்னருள் பாடுநற் றொழில்புரிவேன்; 
நீண்டதோர் புகழ்வாழ்வும் - பிற 
நிகரறு பெருமையு மவள்கொடுப்பாள். 

No comments:

Post a Comment